தொலைத்து விட இனி எதுமே
இல்லை என விரக்தியை உணரும் விபச்சாரியிடம் கடன் சொல்லிப் போகும் ஒரு வாடிக்கையாளனைப் நோக்கி அவள் சினந்து உமிழ்ந்த அந்த உமிழ்நீர் அவன் முகத்தின் மீது வடிந்து கொண்டிருக்க அதில் அவளின் வறுமையில் தொலைத்த கனவுகளின் வலி விம்மி கசிந்தது.
அவளை நிழலாய் தொடரும் இயலாமையின் பாவப்பட்ட ஆத்மாவின் உஷ்ணத்தை தணித்துக் கொள்ளவதற்காக மடை திறந்தது போல் தூஷணத்தை பொறுக்கி எடுத்து அவனைத் தூற்றினாள்.
வானம் கருத்து ..
இடியுடனான மழை தூறத் தொடங்கியது.
இனி எவ்வளவு தூரம் பறந்தாலும் விருட்சம் தரும் நிழல்கள் இல்லை என்று உணர்ந்த அந்த சின்னச் சிறு குருவிகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்த ஒரு மின்கம்பியில் அமர்ந்து கொள்ளவும் சரியாக மழையும் அடித்துக் கொட்டத் தொடங்கியது
விபச்சாரி பேசுவதை நிறுத்திவிட்டு கண்களை தொடைத்த படி தனது வீட்டை நோக்கி மழையில் நனைந்தபடியே நடக்க தொடங்கினாள்.
காற்று பலமாக வீசவும் கம்பிகள் முன்னும் பின்னும் பலமாக ஆடத்தொடங்கின . அதில் அமர்ந்த குருவிகள் அதைப் பற்றி கவலைப் படாமல் தங்கள் அலகில் விழுந்த மழைத்துளிகளை அதிசயமாக பார்த்து கொண்டே மழையில் நனையத் தொடங்கின..
சில நேரங்களில் வாழ்வு உயிர்வாழ்வதற்காக நிகழ்வாக பல உயிர்களுக்கு மாறிப் போகின்றன.
வாழ்தலின் நிதி நியாயங்கள் பேச எல்லோருக்கும் கொடுப்பனை கிடைப்பதல்ல..
எல்லாமே ஒரு நிகழ்வாக மட்டும் கடக்க..சிலருக்கு ஓரு நாளின் இரவு இப்படித் தொடங்கியிருக்கலாம்