தற்சமயம் நீ தனித்து பறந்து கொண்டிருக்கலாம் ஒரு ஆழமான பாதாளச் சுரங்கத்தினூள்
உன் மரணம் அறிந்து என் இதயத்துடிப்பும் இடமாறி சுவாசம் இடைவெளி தொலைத்து சீரற்ற கோடுகளாய் வெளிவந்து விழுகின்றது.
என்றோ உனக்குள்ளேயே நீ தீர்மானித்திருக்க வேண்டும். அதை கேட்பதற்கு நான் யார்..எவருடைய சுதந்திரத்திலும் தலையிடுவதை தவறு என்று நானறிவேன்.
எமக்கிடையில் நிகழ்ந்த மகிழ்ச்சிவான கணங்கள் இப்பவும் என்னைச் சுற்றி அலையும் காற்றில் நிரம்பி வழிகின்றது
ஒரு நீண்ட சமூத்திரத்தின் முன் என் எல்லாக் கேள்விகளை காவிக் கொண்டு நிற்கிறேன். அடிவானத்தை நோக்கி வெறுத்து நிற்கும் என் கண்களில் தேங்கி இருக்கும் சில நீர்த்துளிகளில் இன்னும் உன் சிரிப்பொலி தேங்கி நிற்கிறது.காற்றில் ஒலியில் என் அருகேவட்டமிடுகின்றது.
பசிக்கின்ற குழந்தையின் பசியை உணராத ஒரு தாயின் குற்றவுணர்வை என் ஆத்மா இப்போது உணர்க்கின்றது.
நிறையவே உன்னை என் சிறுவயது நினைவுக்குள் தேக்கி வைத்திருக்கிறேன். அதனால் நீ இல்லாத இனி வரப்போகும் வெறுமையான கணங்களை அந்த நினைவுகளை கொண்டு என்னை ஆற்றிக் கொள்வேன்.
நீ ஒரு ஆழகான ராட்ச பறவை ..நீ பறப்பதற்கு இந்த பூமியின் பரப்பளவு போதாது என்பதை நான் எப்போதோ அறிவேன்.
மரணத்தின் பின் மரணம் நிகழாது தோழனே அதனால் இனி நீ விழித்திரு.. வாழ்ந்த காலங்களின் வலிமையான
பக்கங்களை நீ பார்த்திருக்க கூடும் அவை உனக்கு இந்த பூமியை கடந்த மாற்று தேசத்தை அறிமுகப்படுத்தியிருக்கலாம்.
ஏன் எதற்கு என்று உன்னை கேட்க போவதில்லை. நீ தேர்ந்தெடுத்த விடுதலை உன்னை பாதுகாக்கட்டும்..உன்னை சுற்றி வீசும் காற்று தன் இதமான இறக்கைகளால் உன்னை அரவணைக்கட்டும். இதமான சூரியக்கதிர்கள் நர்த்தனம் ஆடும் நிலங்களில் நீ துயில் கொள்.
என் விடைகளுக்கான பதில்களை நானே தேடிக் கொள்கிறேன்..சுகமாக பறந்து போ என் ஆழகான ராட்சத பறவையே
பாமதி சோமசேகரம்